புதிய விமான நிறுவனம் தொடங்க AirAsia திட்டம் – டோனி ஃபெர்னாண்டஸ்

கோலாலம்பூர்:

லகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், ஏர்ஏஷியா (AirAsia) நிறுவனம் ஒரு புதிய விமானச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருவதாக அதன் இணை நிறுவனர் டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

புதிய விமான நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வெளியாகும். இதற்காகச் சில விமானங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்ற நிகழ்வில், 150 ஏர்பஸ் (Airbus) A220 விமானங்களை வாங்குவதற்கான பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் ஏர்ஏஷியா கையெழுத்திட்டுள்ளது.

சிறிய மற்றும் அதிவேகமான இந்த விமானங்களைக் கொண்டு ஆசியாவின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த பயணிகளைக் கொண்ட சிறிய நகரங்களுக்கும் லாபகரமாகச் சேவைகளை வழங்க இந்த விமானங்கள் உதவும்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் விமானத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்துப் பேசிய டோனி ஃபெர்னாண்டஸ்:”எந்தவொரு நெருக்கடி காலத்திலும் புதிய வாய்ப்புகள் ஒளிந்துள்ளன. அந்த வாய்ப்புகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவதே ஏர்ஏஷியாவின் வளர்ச்சிக்குக் காரணம். தற்போதைய எரிபொருள் விலை உயர்வு ஒரு தற்காலிகமான நிலையே,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக முன்கூட்டியே காப்பீடு செய்யும் (Hedging) முறையை ஏர்ஏஷியா தவிர்த்து வருகிறது. இதனால் தற்போது பங்கு விலை சரிவைச் சந்தித்தாலும், நீண்ட கால அடிப்படையில் இதுவே லாபகரமானது என்பது நிறுவனத்தின் கணிப்பு.

வியட்நாமில் தனது தொழிலை விரிவுபடுத்த ஆலோசித்து வரும் ஏர்ஏஷியா, விரைவில் பஹ்ரேனிலிருந்தும் தனது விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளது. இந்த அதிரடி விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம், 2035-ஆம் ஆண்டிற்குள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 175 இடங்களுக்குத் தனது சேவையை விரிவுபடுத்த ஏர்ஏஷியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here