ஜோகூரில் பயங்கரம்: கோத்தா திங்கி அருகே சொகுசு கார் தீப்பிடித்த விபத்தில் சிங்கப்பூர் தம்பதி உயிரிழப்பு

கோத்தா திங்கி:

ஜோகூர், கோத்தா திங்கி பகுதியில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் சென்ற சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜாலான் ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையின் 57.5 கிலோமீட்டர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த யியோ தியான் வென் லியோங் (34 வயது), நிங் புவாய் யிங் (33 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“விபத்துக்குள்ளான சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி மோதியது. மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பிடித்ததால், காரின் உள்ளே சிக்கிக் கொண்ட தம்பதியினரால் வெளியேற முடியவில்லை. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,” என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசுப் ஒஸ்மான் தெரிவித்தார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். எனினும், அதற்குள் கார் முற்றிலும் சேதமடைந்திருந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here