கோலாலம்பூர்:
மலேசிய ஆயுதப் படைகளில் (MAF) பணியாற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோர்களாக (Entrepreneurs) மாற்றவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு புதிய மாஸ்டர் கிளாஸ் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
‘புவெட் ஏடிஎம்’ (PUVET ATM) மாஸ்டர் கிளாஸ் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக மலாக்கா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 180 சிறு மற்றும் குறு தொழில் செய்யும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு உதவ, பாதுகாப்பு அமைச்சகம் 630,000 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
“மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 இராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் வணிகத் துறையில் கால்பதிக்கவே விரும்புகின்றனர். இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் தலா RM3,500 மதிப்புள்ள சிறப்புத் தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பம், நவீன சந்தைப்படுத்தல் (Marketing) மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் 3 மாதங்களுக்குத் துறைசார் நிபுணர்களால் இவர்களுக்குத் தீவிரப் பயிற்சி அளிக்கப்படும்,” என்று, இப்புதிய திட்டம் குறித்து பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அட்லி ஜஹாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசிய அரசாங்கத்தின் ‘மடானி பொருளாதாரக் கட்டமைப்பு’ (MADANI Economic Framework) கொள்கையின்படி, ஓய்வு பெற்ற வீரர்களை நாட்டின் முக்கிய பொருளாதார உந்துசக்தியாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் நாட்டின் விளிம்புநிலை மக்களின் பொருளாதார தரம் உயரும் என அரசாங்கம் நம்புகிறது.
மேலும், ‘பெர்ஹெபாட்’ (Perhebat) நிறுவனத்தின் மாற்றுத் திட்டங்கள் மூலம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 718 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை 449 ராணுவ வீரர்கள் ஏரோஸ்பேஸ் (Aerospace), ஆட்டோமோட்டிவ் (Automotive) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) போன்ற உயர்தரத் துறைகளில் RM2,500 முதல் RM5,000 வரையிலான சிறந்த சம்பளத்தில் வெற்றிகரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் துணை அமைச்சர் அட்லி ஜஹாரி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.




















