சுங்கை பட்டாணி:
“உனக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க விருப்பமில்லை என்றால், இந்த மிரட்டல் கடிதத்தைக் கொண்டு போய் போலீசிடம் கொடுத்து உன் வீட்டைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்!”
இங்குள்ள தாமான் துங்கு ஹமினா (Taman Tunku Haminah) குடியிருப்புப் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரது வீட்டின் மீது இன்று அதிகாலை சட்டவிரோதக் கந்துவட்டிக்காரர்களான ‘ஆ லோங்’ (Ah Long) கும்பல் சிவப்புச் சாயம் ஊற்றி, போலீசுக்கே சவால் விடும் வகையில் இத்தகைய கொடூர மிரட்டல் கடிதத்தை விட்டுச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து, இரும்புத் தயாரிப்புத் தொழில் நடத்தி வரும் வீட்டின் உரிமையாளர் டான் லீ லிங் (வயது 53) கூறுகையில், இன்று காலை 7.00 மணியளவில் டான் லீ லிங் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோதுதான், வீட்டின் சுவர்கள் மற்றும் முத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது இரண்டு ஆடம்பர சொகுசு கார்கள் மீதும் சிவப்புச் சாயம் (Red Paint) ஊற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வீட்டின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 5.00 மணியளவில் தொப்பி மற்றும் முகக்கவசம் (Face Mask) அணிந்திருந்த மர்ம நபர் ஒருவன் இந்த அநாகரிகச் செயலில் ஈடுபடுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும், கடனைத் தீர்க்காவிட்டால் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றும், வீட்டின் கேட்டைப் பூட்டுவோம் என்றும் எழுதப்பட்ட மிரட்டல் கடிதமும் அங்கு வீசப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல்களுக்குப் பின்னணியில் இருக்கும் துயரக் கதையைத் தந்தை டான் விவரித்தார்:
“எனது 33 வயது மூத்த மகன் சூதாட்டத்திற்கு (Gambling) அடிமையானவன். கடந்த 10 ஆண்டுகளாக அவன் வாங்கிய கடன்களைப் பெற்றோர் என்ற முறையில் நான் பலமுறை அடைத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் தலா 10,000 ரிங்கிட் என இதுவரை மொத்தம் 300,000 ரிங்கிட் முதல் 400,000 ரிங்கிட் (4 லட்சம் ரிங்கிட்) வரை அவனது சூதாட்டக் கடனை நான் அடைத்துள்ளேன்.
இனிமேலும் அவனது தொல்லையைத் தாங்க முடியாமல், சில ஆண்டுகளுக்கு முன்பே அவனை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். அவனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், கடந்த மாதம் மீண்டும் சில கந்துவட்டிக்காரர்கள் அவனைத் தேடி வந்தபோதுதான், அவன் மறுபடியும் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. இனி அவனுக்காக ஒரு பைசா கூட என்னால் கட்ட முடியாது.”
கந்துவட்டிக்காரர்களின் அராஜகம் குறித்து டான் லீ லிங் மேலும் கூறுகையில், “இதற்கு முன்பும் இந்த ஆ லோங் கும்பலின் மிரட்டல் குறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக நான் அளித்த போலீஸ் புகாரின் விவரங்கள் மற்றும் ‘ரிப்போர்ட் நம்பர்’ (Report Number) முதற்கொண்டு அந்தக் கும்பலுக்கு அப்படியே தெரிந்துள்ளது.
மேலும், போலீசார் தங்களின் ‘சகோதரர்கள்’ (Brothers) என்றும் அவர்கள் எங்களிடம் கொக்கரிக்கிறார்கள். அதனால்தான், இந்த விவகாரத்தைக் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் (Bukit Aman) காவல்துறைத் தலைமையகத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்று, ஒரு விரிவான விசாரணை கோர முடிவெடுத்துள்ளேன். கடன் வாங்கியது என் மகன், கந்துவட்டிக்காரர்கள் அவனிடம்தான் போக வேண்டுமே தவிர, அப்பாவி குடும்பத்தினரையும், எனது தொழிற்சாலை ஊழியர்களையும் மிரட்டக் கூடாது,” என்று அவர் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய கோலா மூடா மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் (ACP) ஹன்யான் ரம்லான், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.




















