கோலாலம்பூர்:
மலேசியாவில் இளம் வயதினரிடையே தொற்றா நோய்களின் (NCDs) பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதால், நாடு ஒரு கடுமையான சுகாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மீதான சுமை அதிகரிப்பதுடன், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் மனநலப் பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அதீத மன அழுத்தம் ஆகியவை மலேசியர்களின் வாழ்நாளைக் குறைத்து வருகின்றன. உடல்நிலை மிக மோசமடைந்த பிறகே பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். இந்தத் தாமதம் மருத்துவச் செலவுகளைப் பன்மடங்கு அதிகரிப்பதோடு, நிறுவனங்களில் ஊழியர்களின் வேலைத் திறனையும் நேரடியாகப் பாதிக்கிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மெதுவடையச் செய்யலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மலேசியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தில் சென்றால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் மலேசியா “மூப்படைந்த மக்கள்தொகை கொண்ட நாடாக” (Ageing Society) மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ‘பெரித்தா ஹரியான்’ ஊடகம் தொகுத்த பல்வேறு ஆய்வுகள், நாட்டின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ஊழியரணியின் உற்பத்தித்திறன் மீதான அழுத்தங்கள் குறித்துப் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளன.
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்:
- உயர் இரத்த அழுத்தம்: மூன்றில் இரண்டு பங்கு (66%) முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அதிக கொழுப்பு (Cholesterol): ஐந்தில் மூன்று பேருக்கு (60%) இந்த பாதிப்பு உள்ளது.
- நீரிழிவு நோய் (Diabetes): ஐந்தில் இரண்டு பேர் (40%) சர்க்கரை நோயுடன் வாழ்கின்றனர்.
- மன அழுத்தம் (Depression): பத்தில் மூன்று பேர் (30%) கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நாள்பட்ட நோய்கள் அனைத்தும் ஒருவருக்கு 40 அல்லது 50 வயதிலேயே தொடங்கி விடுகின்றன. பின்னர் அவர்கள் ஓய்வுபெறும் காலத்தில் இவை தீவிரமடைகின்றன. முறையான சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளத் தவறுவதும், சிகிச்சையைத் தள்ளிப்போடும் அலட்சியப் போக்குமே மலேசியாவின் தற்போதைய பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.




















