(கோகி கருணாநிதி)
கூலாய்:
அண்மையில் நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் புக்கிட் பத்து தொகுதியில் மக்கள் வழங்கிய வெற்றியைத் தொடர்ந்து, அத்தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினரான ஆர்.குமாரன், தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றும் நோக்கில் கூலாய் பகுதியில் நேற்று புதியதாகக் குடியேறினார்
தொகுதி மக்களை எந்நேரமும் எளிதில் சந்தித்து அவர்களது தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும். மக்கள் பிரதிநிதியாகப் பதவியேற்ற பிறகு அவர் எடுத்துள்ள முதல் முக்கியமான நடவடிக்கையாக என்பதை அவர் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் வெறும் தேர்தல் வாக்குறுதியாக அல்லாமல், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகவும் கடமையாகவும் கருதுவதாக ஆர்.குமாரன் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை மதித்து, அவர்கள் எதிர்பார்க்கும் சேவையை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் வழங்குவதே தனது முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
புக்கிட் பத்து தொகுதியின் வளர்ச்சிக்காக மக்கள் நலன், கல்வி, பொருளாதார முன்னேற்றம், இளைஞர்களுக்கான வாய்ப்புகள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், “பங்சா ஜோகூர்” என்ற உயரிய எண்ணத்தை முன்னிறுத்தி, இன, மத வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான சேவையை வழங்குவதோடு, தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இடையறாது உழைப்பேன். மக்கள் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையே எனது மிகப் பெரிய பொறுப்பு. அந்த நம்பிக்கையைச் செயலால் நிரூபிப்பதே என் இலக்கு,” என்று குமாரன் தெரிவித்தார்.




















