நீதிமன்ற உத்தரவு கோரப்படும்-பேராசிரியர் இராமசாமி.
சுங்கைபட்டாணி
-கெடா மாநிலத்தில் பழைய தோட்டம் என சொல்லப்பட்டு வந்த யூபி ஆறுமுகம் தோட்டத்தில் வசித்து பின் இறந்தவர்களின் இடுக்காட்டு கல்லறைகளை கெடா மாநில மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான ’உடா நிறுவனம்” அடாவடித்தனமாக தகர்த்ததில் அதன் உறவினர்கள் கடும் கோபத்தில் திளைத்துள்ளனர்.
விவரம் அறிந்து அங்கு உடனே விரைந்த பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, இங்குள்ள இந்தியர்களுக்கு கெடா மாநில அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் போதும் இனியும் தொடர வேண்டாம் என தனது கோபத்தை பயங்கரமாக வெளிப்படுத்தினார்.
கெடா மாநில மந்திரி பெசார் சனுசிக்கு இந்த விவகாரம் நிச்சயம் தெரியும். அவருக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நிகழாது என்றார்.
இந்த நாட்டில் கோவில்கள் நமது அடையாளம்.தமிழ்ப்பள்ளிகள் நமது அடையாளம்,இறந்தவர்களின் நினைவாக எழுப்பட்ட கல்லறைகளும் நமது அடையாளம்தான் என ஆதங்கத்தை தெரிவித்தார்.
ஏற்கனவே நமது இரண்டு ஆலயங்களை உடைத்தது போதும்.ஒரு தமிழ்ப்பள்ளி அதன் நிலம் 3ஆண்டுக்கு குத்தகை விடப்பட்ட்டிருப்பது பெரும் அநியாயம்.3ஆண்டு குத்தகை முடிந்தப் பின் அந்தப் பள்ளியின் கட்டடத்தை உடைத்துக் கொண்டு எங்கே போவது.
அதுபோல தைப்பூச பொதுவிமுறையிலும் கையை வைத்திருக்கிறது. கெடா மாநில பாஸ் அரசாங்கம் திட்டமிட்டடே இங்குள்ள இந்தியர்களை பழி வாங்கிறது என்றார்.
இங்கு மேம்பாடு செய்வதற்கு கெடா மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான ’உடா” நிறுவனம் உடனடியாக தனது மேற்கொள்ளவிருக்கும் வேலைகளை நிறுத்த வேண்டும். இது குறித்து உடா நிறுவனத்திற்கு கடிதம் எழுதவதோடு இங்கு மேற்கொள்ளவிருக்கும் வேலைகளை உடனடியாக நிறுத்த நீதிமன்ற உத்தரவினை கோரப்படும் என்றார்.
கடந்த 1950 ஆண்டுகளில் பெருநிலக்கிழார் என்.டி.எஸ்.ஆறுமுகம்பிள்ளைக்கு யூபி தோட்டம் சொந்தமாக இருந்தது. அப்போது இங்கு இறந்தவர்களை தற்போது பிரச்சினையை எதிர்நோக்க்கியிருக்கும் நிலமான யூபி தோட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டு வந்ததாக இதுநாள் இந்த கல்லறைகளை தகர்க்காமல் இருக்க போராடி வந்த முன்னாள் இராணுவ வீரர் புருஷோத்தமன் கூறினார்.
1970 -ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் என்.டி.எஸ் ஆறுமுகத்திற்கு சொந்தமான நிலம் பறிபோனபோது சம்பந்தப்பட்ட இடுகாட்டு நிலமும் அதில் அடங்கும்.
அதன் பின் கெடா மாநில மேம்பாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் இடுகாட்டு இருக்கும் அருகில் வீடுகள் கட்டப்பட்டபோது கல்லறைகளையும் இடுக்காட்டையும் இடைவெளியிட்டு தொடர்ந்து அங்கு வீடுகள் அமைக்கப்பட்டன.
-கு.அன்பரசன்









