கோலாலம்பூர்
ஸாக்கிர் நாய்க் மீது போலீஸ் தரப்பு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் மீது போதுமான அளவுக்கு குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஸாக்கிருடைய நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மீட்டுக் கொள்ளப்பட்டு அவர் நாடு கடத்தப்படுவதே நல்லது என மலேசிய முன்னாள் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹீம் நோர் கருத்துரைத்துள்ளார்.
கிளாந்தானில் அவர் பேசிய இனவாத பேச்சும் இந்தியாவில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுமே போதுமானது. எனவே அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என நான் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என அப்துல் ரஹீம் மேலும் கூறினார்.
ஸாக்கிர் மீதான குற்றங்கள் நிரூபணமானால் அவருடைய குடியுரிமை அந்தஸ்து பற்றி முடிவெடுக்கப்படும் என் பிரதமர் மகாதீர் கூறியிருந்ததை அப்துல் ரஹீம் சுட்டிக் காட்டினார்.
என்னை பொருத்தவரை ,ஸாக்கிர் மலேசியாவின் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிவிட்டார். குறிப்பாக இந்துக்களைப் பற்றி. எனவே போலீஸ் விசாரணையின் முடிவுகள் வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நிறைய சமய போதகர்கள் இருந்தாலும் ,இவரை மட்டும் அந்நாட்டு அரசாங்கம் தேடுவதற்கான காரணம் கண்டிப்பாக இருக்கும். நம் நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒருவர் தேவையா ? என்னை கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று சொல்வேன் என் அப்துல் ரஹீம் கருத்துரைத்துள்ளார்.