பூம்முகன், தனகராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி

பட்டர்வொர்த் –

விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் செய்து கொண்ட ஜாமீன் கோரும் மனுவை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இரண்டு தரப்பின் வாதப் பிரதிவாதங்களைச் செவிமடுத்த நீதிபதிகள் நோர்ஹயாத்தி முகமட் யுனுஸ், நூர் அய்னி யூசோப் இந்தத் தீர்ப்பை அறிவித்தனர். இரண்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. ஜாமீன் கோரும் மனுவை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. ஆகவே இந்த மனுக்களை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதே சமயம் எம்.பூமுகன் வயது 29, எஸ் தனகராஜ் வயது 26 ஆகியோருக்கு எதிரான வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது.

காவலாளியான பூமுகன், தனகராஜ் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் டாக்டர் என். அகிலன், இ. ஞானசேகரன், அட்ரிவி ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் டிபிபி ஜேஜி காமினி, லிம் சோ சிம் ஆகியோர் வழக்கை நடத்துகின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள எனது கட்சிக்காருக்கு எதிரான குற்றச்சாட்டு கடுமையானது அல்ல எனவும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் ஞான சேகரன் வாதாடினார்.

எனினும் இந்த வழக்கு இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கின்ற காரணத்தினால் ஜாமீன் அனுமதிக்கக் கூடாது என்று டிபிபி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.
விடுதலைப்புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக பூமுகனும் தனகராஜூம் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here