கோலாலம்பூர்:
ஜோகூர், குளுவாங்கில் தான் பெற்றெடுத்த பச்சிளம் பெண் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயது கல்லூரி மாணவியான நூர்ஷஸ்வென் இட்ரிஸ், இன்று குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நூராசிடா ஏ ரஹ்மான் முன்னிலையில் இக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இருப்பினும், இது மரண தண்டனைக்குரிய கொலை வழக்கு என்பதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எதிரியிடம் குற்ற ஒப்புதல் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி, குளுவாங், தமான் செத்தியா முத்தியாராவில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் (கொலை வழக்கு) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கொலை வழக்கு என்பதால் எதிரிக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.
இரசாயனப் பரிசோதனை அறிக்கை, சந்தேக நபரின் மனநல உளவியல் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கைகள் பெறப்பட வேண்டியுள்ளதால், இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.























