பூச்சோங் –
பூசாட் பண்டார் பூச்சோங் 1 தேசிய இடைநிலைப்பள்ளியில் சீனப்புத்தாண்டு அலங்காரங்களை அகற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் சில அரசாங்க அதிகாரிகள் அப்பள்ளிக்கு வருகை தந்த பின்னர் மீண்டும் அந்த அலங்காரத்துடன் அப்பள்ளியில் சீனப்புத்தாண்டு களைகட்டியிருக்கிறது.
மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த அலங்கரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) அந்த அலங்காரங்களை அகற்றும்படி நேற்று முன்தினம் இரவு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இது சட்டத்திற்குப் புறம்பானது என்று அக்கட்சியின் உதவித் தலைவரும் வழக்கறிஞருமான முகமட் கைருல் அஸாம் அப்துல் அஸிஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கல்வி துணையமைச்சர் தியோ நி சிங், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், நிதியமைச்சர் லிம் குவான் எங், தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங், வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா ஆகியோர் அப்பள்ளிக்கு வருகைதர இருப்பதாகச் சொல்லப்பட்டது.
அதே சமயத்தில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் அப்பள்ளிக்கு வருகை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.