மலேசிய அரசு முடிவு
புத்ராஜெயா –
கொரோனா வைரஸ் நோய் பரவியுள்ள சீனாவின் ஹுபே மாநிலத்தில் இருந்தும் வுஹான் நகரத்தில் இருந்தும் சீனப்பிரஜைகள் மலேசியா வருவதற்குத் தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சீனப் பிரஜைகளுக்கு விசா வழங்குவது உள்ளிட்ட அனைத்து குடிநுழைவுத்துறை வசதிகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாகப் பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
கொரோனா பரவியுள்ள பகுதிகளில் இருந்து வரும் சீனப்பிரஜைகளுக்கு விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் மேலும் கூறியது.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை மலேசிய அரசு கடைப்பிடிக்கிறது. இந்த நோய் பரவுவதைத் தடுப்பதிலும் எதிர்நோக்குவதிலும் நிபுணர்களின் ஆலோசனையையும் மலேசியா பெற்றுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
அவ்வப்போது நிலைமை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் சிறந்த முறையில் செயல்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
வுஹான் நகரில் இருந்தும் ஹுபே மாநிலத்தில் இருந்தும் வரும் அனைத்து சீனப் பிரஜைகளுக்கும் விசா இல்லாத வசதி, வந்து சேர்ந்தவுடன் விசா வழங்குவது, இ-விசா, வழக்கமான விசா உள்ளிட்ட அனைத்து வங்திகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.