நைரோபி, மார்ச் 13-
ஆப்பிரிக்க காடுகளில் அதிகளவில் ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன. இதில் கென்யா நாட்டின் கரிசா காடுகளில் அரிதிலும் அரிதான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வந்தது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதில் ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியையும், அதன் குட்டியையும் வேட்டைக்காரர்கள் அண்மையில் வேட்டையாடி கொன்றது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டியின் எலும்பு கூடுகள் கரிசா பகுதியில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் ஒரேயொரு வெள்ளை நிற ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே உயிரோடு இருப்பதாகவும், அதனை பாதுகாக்க அனைத்துவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டகச்சிவிங்கிகள் அதன் தோலுக்காகவும், கறிக்காகவும் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் 40 சதவீத ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.