இஸ்லாமாபாத், மார்ச் 22-
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. ஈரானுக்கு புனித யாத்திரை சென்று வந்த பலருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்து விட்டது. இதில் 267 பேர் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கராச்சியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இதனால் வைரஸ் பாதிப்புக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் மக்கள் அனைவரும் தாங்களே 45 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் சிகிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து விதமான வரிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்து உள்ளது.





















