இத்தாலியில் சுமார் 7 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டின் சிவில் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,19,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,681 பேர் பலியாகியுள்ளனர். 19 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவில் அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி கூறும்போது, “இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலவரம் தற்போதுள்ள எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும். தற்போதுள்ள நிலவரத்தின்படி சுமார் 7 லட்சம் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஸ்பெயின், இத்தாலி நாடுகள் கடுமையான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.