புதுடில்லி –
பிரதமர் மோடியை கௌரவிக்க அனைவரும் 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள் என்ற வைரல் டுவிட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மோடி, இது தன்னை சர்ச்சையில் சிக்க வைப்பதற்கான முயற்சியாக தோன்றுவதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை கௌரவிக்க வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து மோடி தனது டுவிட்டரில் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: என்னை கௌரவப்படுத்த அனைவரும் 5 நிமிடம் எழுந்து நிற்குமாறு சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக ஒரு தகவல் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை என்னை சர்ச்சையில் மாட்டி விடுவதற்கான குறும்புத்தனமான முயற்சியாக கருதுகிறேன். ஒருவேளை யாராவது நிஜமாகவே என் மீதுள்ள அன்பால், கௌரப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை தத்தெடுங்கள். குறைந்தபட்சம் கொரோனா நெருக்கடி தீரும் வரையாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுங்கள். இதை விட வேறு எதுவும் எனக்கு பெரிய கௌரவம் இல்லை. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.