கொரோனா எங்கள் கைலாசவில் கால் வைக்க முடியாது

கொரோனா எங்கள் கைலாசாவில் கால் வைக்க முடியாது என கூறி நித்தியானந்தாவின் பெண் சிஷ்யைகள் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.உலகம் முழுக்க, கொரோனா பாதிக்காத நாடுகளே இல்லை என்கிற அளவுக்கு போய்விட்டது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளே, கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடி வருகின்றன.

கொரோனா பாதிக்காத நாடு எது என்று கூகுளில் மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் உலகத்திலேயே ரொம்பவே சந்தோஷமாக, எதை பற்றியும் கவலைப்படாமல் வாழும் மக்கள் கொண்ட ஒரு நாடு இருக்கிறது. அது எங்கள் நித்தியானந்தாவின் கைலாசா என்கிறார்கள் அவரது சிஷ்யைகள்.

கொரோனா, வைரஸ் பாதிப்பு வரும் முன்பாகவே, அதை ஞானக்கண்ணால் அறிந்து, தனியாக, கைலாசா என்று ஒரு நாட்டையே உருவாக்கியவர் நித்தியானந்தா என்று அவரது சிஷ்யர்கள் சொல்லிக் கொண்டிருப்பது அறிந்ததுதான். இப்போது அங்கே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆடல், பாடல் கொண்டாட்டம்தான். நித்யானந்தா சிஷ்யை வெளியிடும் டிக்டாக் வீடியோ இதற்கு நல்ல சான்று.

உலகில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர்களோ அதை பற்றி கவலைப்படவில்லை. கூட்டமாக நின்றபடி மகிழ்கிறார்கள். ஆடிப் பாடுகிறார்கள். நித்தியானந்தாவை, சிவபெருமானோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ வெளியிட்டதோடு, சில நேரம் அவரை பெண்களின் மனம் கவர்ந்தவராகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டு வருகிறார் அவரது சிஷ்யை ஒருவர்.

உங்கள் வாழ்க்கையை கொண்டாட வேண்டுமா, நீங்கள், ஆதி கைலாசத்தில் இருக்க வேண்டும் என்று கூறி, ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் பிரியா நித்தி என்ற பெயருள்ள அந்த சிஷ்யை. அதில், கோலாட்டத்தை ஆடியபடி, பெண்கள் மகிழ்வாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

மற்றொரு வீடியோவில் கைலாசாதான் எப்போதும் என கேப்ஷன் கொடுத்துள்ளார் அந்த சிஷ்யை. அதில் ஒவ்வொரு பெண்ணாக ஒன்று சேர்ந்து கையை தூக்கி மகிழ்ச்சி வெளிப்படுத்துகின்றனர். பின்னணியில், காதல் மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற, பெண்ணின் பின்னால் சுற்றாமல் என்ற பாடல் ஒலிக்கிறது. இதற்குதான் சொல்கிறோம், கைலாசா வந்து விடுங்கள் என்று யார் கேட்டார்கள் என்று கூறும் வகையில் உள்ளது சிஷ்யைகளின் வேலைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here