தெண்டுல்கருக்கு 47-வது பிறந்தநாள்: விளையாட்டு உலகினர் வாழ்த்து

மும்பை, ஏப்ரல் 25-

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 47-வது பிறந்தநாளாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருவதால் தெண்டுல்கர் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.

நேற்று காலையில் அவர் தனது தாயாரின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். அப்போது தாயார் அவருக்கு பிள்ளையார் படத்தை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

தெண்டுல்கரின் பிறந்தநாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், இன்னாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெண்டுல்கருக்கு சமூகவலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா, ஆர்.அஸ்வின், இஷாந்த் ஷர்மா, ரஹானே, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர்கள் ஷேவாக், யுவராஜ்சிங், கவுதம் கம்பீர், இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் உள்பட பல்வேறு தரப்பினரும் தெண்டுல்கருக்கு சமூக வலைத்தளம் வழியாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

விராட்கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெண்டுல்கருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘பலருக்கு உத்வேகம் அளித்த, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வருகிற காலங்களும் உங்களுக்கு அற்புதமாக அமைய வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here