பல மாவட்டங்கள் சிவப்புக்கு மாறும் அபாயம்
சென்னை –
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் பெற்றுள்ளது. பல மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்புக்கு மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்த வியாபாரச் சந்தையான சென்னை, கோயம்பேடு, தொற்றுப் பரவும் களமாக மாறியதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.
நேற்று முன்தின நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்தது. கோயம்பேடு பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் கடை நடத்தியவர் மூலம் பலருக்கு தொற்று ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தை வாயிலாக மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டது.
கோயம்பேடு மூலம் சென்னையில் 102 பேர், அரியலூரில் 22 பேர், கடலூரில் 26 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், விழுப்புரத்தில் 53 பேர், பெரம்பலூரில் ஒருவர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்கள் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறும் ஆபத்து ஏற்பட்டது.