அண்மையக் காலமாக மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் பலர் உயிரிழந்துள்ளனர். குடி போதையில் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு எதிராக சட்டத் திருத்ததை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
மது, போதைப் பொருள் போன்றவற்றை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1987ஆம் ஆண்டு சாலை போகுவரத்துச் சட்டம் அல்லது 333 சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
இச்சட்டத் திருத்தம் குறித்து, மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், ஜூன் மாத மத்தியில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற வாகனமோட்டிகளுக்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் போதையில் வானத்தைச் செலுத்துபவர்களுக்கு, கடுமையான தண்டனையை வழங்க இச்சட்டத் திருத்தம் வகை செய்யும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.