கோலாலம்பூர் , அக்டோபர் 30 :
அனைத்து தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புகளும் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை கொண்டிருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தனது வரவு-செலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.
“அநேகமாக பலருக்கு டான் லீ பீ, கைருன்னிசா கோ அப்துல்லா, வான் ஸுரைதா அபு மற்றும் கோ சூ லெங் போன்ற சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுபவர்களை நாம் அடிக்கடி தொலைக்காட்சித் திரையின் மூலையில் பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
தற்போது, சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான RTM மூலமான செய்தி ஒளிபரப்புகளில் மட்டுமே பார்க்க முடிகின்றது.
மாற்றுத்திறனாளிகள் சமீபத்திய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வகையில், தனியார் துறை உட்பட அனைத்து தொலைக்காட்சி நெட்வொர்க்குகளுக்கும் இந்தப் புதிய கொள்கை பொருந்தும் என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.
சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் உதவியுடன் வழங்கப்பட உள்ளனர். அத்தோடு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் பெர்னாமாவின் 24 மணி நேர செய்தி ஊடகமான பெர்னாமா தொலைக்காட்சியிலும் அதன் விளையாட்டு செய்திப் பிரிவுகளிலும் இந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களுடன் செய்திகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-பெர்னாமா




















