பொருளாதார மறுதொடக்க காலத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்

இன்று நாட்டு மக்களிடம் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் மறுதொடக்கம் செய்யப்படும் இச்சூழலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியுள்ளார்.

தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளும் வரும் நாட்களில் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட வழித்தடங்களில், ரயில், விமான போக்குவரத்து போன்ற போக்குவரத்துகள் மறுதொடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல், வணிக வளாகங்கள், உணவங்கள், மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் போன்றவற்றை கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர பிற இடங்களில் திறக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

“முன்னதாக நான் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த தொற்று குறித்து நாம் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.  நாம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் “ என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், “தேசம் பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்ற நாடுகளைவிட நாம் இந்த தொற்றினை சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் வைத்துள்ளோம்.“ என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 60 நாட்கள் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா பத்தாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாடு முழுவதும் 1.82 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here