அலோர் காஜா: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) தெற்கு நோக்கிய திசையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று தடம் புரண்டது. இதில் எட்டு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஒன்பது பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இன்று காலை 10.18 மணியளவில், கோலாலம்பூரிலிருந்து பயணித்த அந்தப் பேருந்து, நெடுஞ்சாலையின் 213.4 கிலோமீட்டர் அடையாளப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வடிகாலில் சாய்ந்தது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மண்டலம் 2-ன் ஒரு தீயணைப்பு வாகனமும் 10 வீரர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது குறித்து தீயணைப்பு கண்காணிப்பாளர் ஸுல்கைரானி ரம்லி கூறுகையில், “இந்த விபத்தில் உள்ளூர் ஓட்டுநர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 8 சுற்றுலாப் பயணிகள் (2 ஆண்கள், 3 பெண்கள், 3 சிறுவர்கள்) என மொத்தம் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டனர். ஓட்டுநர் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்றார்.
காயமடைந்தவர்களுக்குத் தீயணைப்புத் துறையின் அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) குழுவினர் முதலுதவி அளித்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கைகள் காலை 11.13 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தன.





















