எல்லைப் பிரச்சினைகளும் இனவாதமும் ஒரே வண்டியில் பயணம் போகும் துரோகிகள் . ஒன்றைப் பெறுவதற்காகவும் அடைவதற்காகவும் செய்யும் முயற்சிபோலவே இருந்தாலும் நியாயம் தவறுவதில் எல்லை மீறுகின்ற இரட்டைப் பிறவிகள்.
நியாயம் என்பது எல்லை வரம்பாக கணக்கிடப்படுகிறது. எல்லை என்றால் நியாயம் என்ற பொருளிலும் அடங்கியிருக்கிறது.
ஒரு நாடு எல்லை மீறுகிறது என்றால், அந்நாடு நியாயமற்று நடந்துகொள்கிறது என்பதாகவே இருக்கும். உண்மையும் அதுதான்,
இந்திய எல்லையை சீனா மீறுகிறது என்றால் நியாயம் தவறுகிறது என்றுதானே அர்த்தம். ஆம், என்பதுதான் பதிலாக இருந்தால், அதைத் தடுக்கும் முயற்சிகள் தவறாகாது என்பதும் சரிதான். சரியான அணுகுமுறைக்கு ஒத்துப்போவதிலும் சிலநாடுகள் மெளனம் சாதிக்கின்றன என்றால் அந்நாடுகளை நட்பு நாடுகள் என்று எப்படிச் சொல்வது?
அப்படிக்கேட்டால் உள்நாட்டுப்பிரச்சினைகள் என்றும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் என்றும் தடைகள் என்றும் காரணப்பேச்சுகள் இருக்கின்றன.
பொறுமை என்பதைக் கையாளும்போது பயம் என்பதாக நினைத்துவிடக்கூடாது. புலி பதுங்குகிறது என்றால் பயத்தால் அல்ல என்பது வேட்டைக்காரனுக்குத் தெரியும். எல்லைக் கோட்டைத் தாண்டுகிறவர்களுக்குப் புரியாது.
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக, இந்தியாவின் நட்புப் பாலத்தை நேப்பாளம் இடித்துக்கொண்டிருக்கிறது. கைகொடுப்பவர்களிடம் கைம்மாறு கேட்கும் நிலைக்குத் தயாராகிவிட்ட நேப்பாளம், பாண்டா கரடிகளை நம்பி சிங்கத்தை எதிர்க்கத்துணிந்துவிட்டது.
துரோகிகளை நல்லவன் என்று நினைக்கும் நேப்பாள எல்லையின் பின்வாசலில் என்னதான் நடக்கிறது.
கொரோனா கதைகளை அறியாமல் நேப்பாளம் எல்லை தாண்டுகிறதா?