சிரமம் என்பது தனிமனிதனுக்கானது அல்ல. ஒரு சமூகத்திற்கானது. சமூகங்கள் சேரந்த சமுதாயத்திற்கானது. சமுதாயம் ஒருங்கிணைந்த நாட்டிற்கானது என்பதாகத்தான் கொள்ளல் வேண்டும்.
இதைத்தான் முறுக்கு மீசைக்காரன் பாரதி பாடிவைத்தான். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான். இதிலிருந்தே தனிமனிதன் என்பவன் தனி மனிதன் அல்லன் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்!
ஜகத்தினை அழித்திடுவோம் என்பது என்பது சமுதாயம் என்பதையே காட்டுகிறது தன்னைப்பற்றியே சிந்திக்கின்ற உலகில், பொதுமைப்பற்றி பலர் சிந்தித்திருக்கிறார்கள், அவர்களுக்குத் தலைவனாக பாரதி நின்றிருக்கிறான் என்பது கோபமல்ல, ஆச்சரியமல்ல. உணர்வு!
நம்நாட்டில் மூத்த குடிமக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். பல குடும்பங்களில் ஒதுங்கி வாழ்கின்ற நிலைக்கு ஆளாவதற்குக் காரணம் என்ன?
மூத்தவர்களால் பயனில்லை என்பதா? மலேசியா மூத்த மக்கள் நாடாக ஆகிவருக்கிறது என்கிறார்கள். அப்படியானால் மூத்த குடிமக்களை என்ன செய்யப்போகிறார்கள் என்றும் எண்ணம் தோன்றுகிறது அல்லவா?
மலேசியா இன்னும் அதற்கான வழிகளை ஆராயவில்லை என்றே தோன்றுகிறது. 60 வயதுக்குமேல் வருமானமிருக்காது. வருமானம் இல்லாதவர்கள் வீட்டுக்குப் பாரமாகவே இருப்பார்கள். ஒதுக்கப்படுவார்கள். அவர்களின் ஆசைகள் நிச்சயம் நிறைவேறாது. இப்படிப் பட்டச் சூழ்நிலையில் அவர்களின் நிலை என்ன? மன இறுக்கம் அதிகமாகும். தங்கள் தேவைகளுக்குத்தடை வரும்போது மூத்தவர்கள் என்பதே வலியைத்தான் ஏற்படுத்தும்.
திடகாத்திரமான மூத்தவர்களின் சக்தி வீணாகிவிடக்கூடாது. அதை அறிந்து, உணர்ந்து, வீணாக்காமல் திசை திருப்பப்பட்டால் அச்சக்தியை உற்பத்தித்துறைக்கு மாற்றறமுடியும் என்பது ஆராயப்படவில்லையா? அவர்களால் முடியாது என்பதுதான் இன்றைய நிலை.
மூத்தவர்கள் இன்னும் உழைக்கும் தெம்போடு ஆற்றலில் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் இலகு தொழில்துறைக்குக் குத்தகை அடிப்படையில் நியமிக்கலாம். அவர்களிடமிருந்து 60 விழுக்காட்டுக்கும் அதிகமான உற்பத்தியைப் பெறமுடியும். யாரும் அதுபற்றி யோசிக்கவில்லையா?
இதற்கான திட்டத்தை மனித வளத்துறை உருவாக்கலாம். மூதவர்களை செருகுதல் அடிப்படையில் அல்லது அதற்கான் தளத்தை அடையாளம் காணலாம். அதனால் ஆள் பற்றாக்குறை என்பதற்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும். மூத்தவர்கள், வயதானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக இருந்தாலும் அவர்களில் பலர் ஆற்றல் குறையாதவர்களாகவும் இருக்கின்றனர். வயது என்பதைக் காராணம்காட்டி அவர்களை ஒதுக்கிவிடுவதால் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வரையில் சொக்சோ உதவித்தொகை வழங்கினால் அவர்களின் மன இறுக்கம் குறையலாம்.
இது குறித்தும் மனித வளத்துறை ஆராயவேண்டும் பலர் கூறிவருகின்றனர்.
ZERO WASTE என்பதுபோல் எதையும் உதாசீனப்படுத்தாமல் இருப்பதைப்போல மூத்த குடிமக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மருந்தாகவும் சுய காலில் நிற்கவும் உதவும். இதனால், மருத்துவச்செலவு குறையும். குடும்பமும் மதிக்கும். இறுதிக் காலம் சுய மரியாதைக் கொண்டதாக இருக்கும்.
தலைநிமிர்ந்து வாழ உதவும்.