எந்த பிரச்சினையும் இந்த உலகில் நிரந்தரமல்ல. கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல எந்த தோல்விக்கு பிறகும் வெற்றி நம்மை வந்து சேரும். எந்த குறைகளுக்கு பின்பும் நிறைவு வரும். நம்மை இதுவரை பாதுகாத்து வந்த இனிமேலும் இறைவன் பாதுகாத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி நம் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
தொழிலில் சரிவையே சந்தித்த ஒரு தொழில் அதிபர் மனம் நொந்து போய் கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் கடற்கரையில் இருந்த மணலில் அழகாக வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடலில் இருந்து வந்த அலை அந்த குழந்தைகள் கட்டிய வீட்டை அழித்து விட்டது. இதைப்பார்த்த அந்த தொழில் அதிபர் அந்த குழந்தைகள் இப்போது அழப்போகிறது என்று சற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த குழந்தைகள் அழவில்லை. சிரித்துக்கொண்டே வேறு ஒரு இடத்திற்கு சென்று மீண்டும் மணல் வீட்டை கட்ட ஆரம்பித்தனர். இதைப்பார்த்த தொழில் அதிபருக்கு ஒரே அதிர்ச்சி இப்படி இந்த குழந்தைகள் சோர்ந்து போகாமல் திரும்ப திரும்ப மணல் வீட்டை கட்டி விளையாடுகின்றனர். நாமும் தொழிலில் எவ்வளவு சரிவு வந்தாலும் மனதில் சோர்வு அடையாமல் திரும்ப திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி சந்தோஷமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனவே தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளதா? நம்முடைய வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? சோர்ந்து போகாதீர்கள். இப்படி சோர்ந்து போனால் நம் வாழ்க்கை குறுகினதாய் மாறி விடும்.