முகமது அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் முகமதுவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமதுவின் 6-வது பிறந்தநாளை முகமது ஷாப் கொண்டாடினார். இதற்கிடையே மகனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட முகமது ஷாப் முடிவு செய்தார். அதாவது தான் வேலை செய்து வரும் அரசு பள்ளிக்கு சொந்த செலவில் வர்ணம் பூச முகமது ஷாப் நினைத்தார். இதுகுறித்து அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறி அனுமதி கேட்டார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து முகமது ஷாப் தனது சொந்த பணத்தில் ரூ.30 ஆயிரம் செலவழித்து பள்ளி முழுவதும் வர்ணம் பூசினார். தற்போது அந்த பள்ளி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து முகமது ஷாப் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகன் முகமது முஸ்தபா இருதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான். அவனுக்கு சமீபத்தில் தான் ரூ.3 லட்சம் செலவு செய்து இருதய அறுவை சிகிச்சை செய்தோம். இதற்கிடையே அவனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தோம். அப்போது நான் வேலை செய்து வரும் அரசு பள்ளியின் சுவரில் வர்ணம் தேய்ந்து போய் இருந்தது. இதனால் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கு எனது சொந்த செலவில் வர்ணம் பூசி கொடுக்க முடிவு செய்தேன். பள்ளி முழுவதும் வர்ணம் பூச ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகும் என்று கணக்கிட்டு இருந்தேன். ஆனால் என்னிடம் ரூ.10 ஆயிரம் தான் கையில் இருந்தது. இதனால் எனது சம்பள பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை முன்பணமாக வாங்கி பள்ளிக்கு வர்ணம் பூசி உள்ளேன்.
நான் சொந்த செலவில் பள்ளிக்கு வர்ணம் பூசியதை அறிந்ததும் பள்ளிகல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். இது என்வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். நான் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் முயற்சி எடுத்தேன். எனது மகனின் மருத்துவ செலவுக்கு உதவுவதாக மந்திரி சுரேஷ்குமாரும் கூறியுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






