இலக்கை நோக்கி பயணிப்போம்- சரத்குமார்

நேர்மையான உழைப்பும், உறுதியும் கொண்டு இலக்கை நோக்கி பயணிப்போம் என, கட்சியினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக. 30) எழுதிய கடிதம்:

“அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் கடந்து 14 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஓர் மகிழ்ச்சி, பூரிப்பு, பிரம்மிப்பு, புத்துணர்ச்சி பெற்றார்போல ஓர் உணர்வு.

ஆம், 31 ஆகஸ்ட், 2007 காலை இயக்கத்தைத் தொடங்கும்போது இருந்த அதே உற்சாகம்தான் இன்றளவும் பலரிடம் என்னால் பார்க்க முடிகிறது.
பல சோதனைகளைக் கடந்து, வெற்றி, தோல்விகளை சமமாக பகிர்ந்து சோர்வடையாமல் தொடரும் நம் பயணத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இந்த ஆண்டு சரித்திரத்தில் இடம்பெறும் ஆண்டாக, நம் வாழ்க்கையை, நம் செயல்களை, நம் முன்னேற்றத்தை, நம் வளர்ச்சியை ஏன் உலகமே சுற்றுவதை நிறுத்திவிட்டது போல, ஒரு சோதனையான ஆண்டாக அமைந்துவிட்டது.

கொரோனா என்ற தொற்றின் ரூபத்தில் பல சகோதர, சகோதரிகளை, உற்றார், உறவினர்களை, நம் சொந்தங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் 14-ஆம் ஆண்டு சிறப்பாக அமைய பாடுபடுவோம்.

நம் எண்ணங்கள், நம் இலக்கு வெற்றி பெற, நேர்மையான உழைப்பு அவசியம்.

அந்த உழைப்பை அதிகரிப்பீர்கள் என நம்புகிறேன். உழைப்பும், உறுதியும் நம்மை நிச்சயம் வெற்றிப்பெறச் செய்யும் என்ற என் நம்பிக்கைக்கு உறுதுணையாக செயல்பட உங்களை கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here