தமிழகத்தில் டெல்லி, பீகார் மற்றும் மேற்கு வங்கம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த மக்களுக்காக, கடந்த 1 ஆம் தேதியில் இருந்து பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல நாளை முதல் தமிழகத்தில் பயணிகள் ரயிலும், சென்னை மெட்ரோ ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இன்று நள்ளிரவு முதலே பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் செப்.12 ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் நேற்று அறிவித்தார். அதற்கான முன்பதிவுகள் 10 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த 80 ரயில்களுள் 3 ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. டெல்லி, பீகார் மற்றும் மேற்கு வங்கம் இடையே செல்லும் 3 ரயில்களுடன் மொத்தமாக 16 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி, பீகார் இடையே செல்லும் சிறப்பு ரயில் 12 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்றும் திருச்சியில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் ரயில் உட்பட 3 ரயில்களுக்கான முன்பதிவு 8 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.