சீனாவில் உய்குர் இன மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சீனா நிர்வாகம் முன்னெடுக்கும் அதிர்ச்சி நடவடிக்கைகளை பெண் மருத்துவர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். சீன அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த மருத்துவர் நூற்றுக்கணக்கான கட்டாய கருக்கலைப்புகளை மேற்கொண்டார் என அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சீனாவில் இருந்து ரகசியமாக வெளியேறி, தற்போது துருக்கியில் வாழ்ந்துவரும் அவர், சீன அரசாங்கத்தில் பணிபுரியும் போது உய்குர் பெண்கள் மீது 500 முதல் 600 அறுவைசிகிச்சைகள் வரை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளில் கட்டாய கருத்தடை, கட்டாய கருக்கலைப்பு அத்துடன் கட்டாயமாக கருப்பைகளை அகற்றுதல் உள்ளிட்டவை அடங்கும் என்றார்.
மேலும், உய்குர் மக்கள் வசிக்கும் கிராமங்கள் தோறும் சென்று இந்த நடவடிக்கைகளை வலுக்கட்டாயமாக மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பாவியான உய்குர் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டுள்ளதும், கருக்கலைப்பு செய்துள்ளதும் அவர்களுக்கு தெரியாது என்றே அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மருத்துவராக இது தமது கடமை என கருதி இருந்த தமக்கு தற்போது அந்த நடவடிக்கைகள் மீது வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உய்குர் மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை, அவர்களை சீனாவின் இரும்பு கரத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பும் உய்குர் மக்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. இதுவரை சீனாவில் இருந்து தப்பிய 50,000 உய்குர் மக்கள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சீன அரசு ஜின்ஜியாங் பகுதியில் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மக்களை தடுத்து வைத்துள்ளது, அவர்களை தடுப்பு முகாம்களில் சிறை வைத்திருக்கிறது.
சுமார் 12 மில்லியன் உய்குர் இன மக்கள், பெரும்பாலும் இஸ்லாமியர்கள், சீனாவில் வாழ்கின்றனர், மேலும் அவர்கள் தங்கள் சொந்த உய்குர் மொழியைப் பேசும் துருக்கிய இன சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.