திட்டக்குடிதிட்டக்குடி அடுத்த மேலாதனுார் ரேஷன் கடையில் காலாவதியான உணவுப்பொருள் விற்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலாதனுார் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மூலம் 305 ரேஷன்கார்டு தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று பொதுமக்களுக்கு 300 கிராம் எடையுள்ள ராகி தோசை மிக்ஸ் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ராகி தோசை மிக்ஸ் மாவு காலாவதியாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இதனையறிந்த பொதுமக்கள் சிலர், வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த ஈ.கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர் பாலசுப்ரமணியன், காலாவதியான பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டு பணத்தை வழங்குமாறு விற்பனையாளர் குணசேகரனிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கிருந்த சிலரிடம் மட்டும் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொண்டு, ரேஷன்கடை மூடப்பட்டது.இதுகுறித்து திட்டக்குடி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மதியம் 12 மணிக்கு மேல் அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் ராமர், ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் நிற்பதை கண்டு, சோதனையிடாமல் திரும்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காலாவதியான பொருட்கள் விற்கப்பட்டது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.