தற்போதைய உலகில் விதவிதமாக பிறந்தநாளை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக நிறைய செலவும் செய்கின்றனர். அதில் சிலர் பிறந்தநாள் விழாவுக்கான பணத்தை சேமித்து, பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்மய் சித்தார்த் ஷா என்ற 7-ம்வகுப்பு படிக்கும் மாணவன், விலங்குகள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
நேரு விலங்கியல் பூங்காவுக்கு தந்தையுடன் சென்ற அந்த சிறுவன், அங்குள்ள ராயல் பெங்கால் புலியை 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். அதற்கான தொகை ரூ.25,000ஐ விலங்கியல் பூங்கா நிர்வாகியிடம் அவர் வழங்கினார். அதே நாளில், ஹவிஷா ஜெயின் மற்றும் விஹான் அதுல் ஷா ஆகியோர் சில விலங்குகளை தத்தெடுத்தனர். அதே போல் மேலும் சில சிறுவர்கள் பறவைகளை தத்தெடுத்து அதற்காக தலா ரூ.5,000 வழங்கினர்.
புலி மற்றும் பறவைகளை தத்தெடுப்பதன் மூலம் வனவிலங்குகளின் பாதுகாப்பில் அக்கறை, அன்பு காட்டிய குழந்தைகளுக்கு விலங்கியல் பூங்கா நிர்வாகி நாகமணி நன்றி தெரிவித்தார். ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்க அதிக அளவிலான மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.