நடிகர் பவன் கல்யாண் தொகுதியில் ரூ.17 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்!

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் போட்டியிடும் பித்தாபுரம் தொகுதியில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியும் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் காண்கின்றன. இதனால், ஆந்திராவில் முன்முனைப் போட்டி நிலவுகிறது. ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் தொகுதியில் நடந்த சோதனையில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிதாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இருப்பினும் நகைகள் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே வாகனத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்ட நிலையில், மீண்டும் அதே வாகனத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பிடிபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here