தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் தங்கள் லட்சிய திட்டமான ராணா திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தனர். வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்ட ‘ராணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளில், ரஜினிகாந்த் நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து ரஜினிகாந்த் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றதால் ‘ராணா’ திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் அத்திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த் கேட்டதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு அளித்டுள்ள பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளதாவது, ”எந்திரன்’ படத்தை ரஜினி சாரும், ‘தசாவதாரம்’ படத்தை நானும் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாரானோம். ராணா படம் ரஜினி மற்றும் எனக்கும் அடுத்த பெரிய வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் நடக்கவில்லை. இதன் பின்னர் தான் நாங்கள் ‘கோச்சடையான்’ திரைப்பட பணிகளை தொடங்கினோம். இது ராணாவுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது. ஒரு நல்ல கதையைக் கொண்டிருந்தது.
தற்போதும் நான் ‘ராணா’படத்தின் கதையை அடிக்கடி பார்ப்பேன். அது ரஜினி சாரின் கதை, நான் அதற்கு திரைக்கதை எழுதி இருந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து ரஜினிகாந்த் மீண்டும் அந்த கதையை சொல்லும்படி கேட்டார். அதைக்கேட்ட பிறகு ‘இப்போ நம்மால் பண்ண முடியுமா?’ என கேட்டார். முடியுமென நான் சொன்னேன்.
அவர் மனதில் அரசியல் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு தேவைப்படும் அளவு அதிக நேரம் ஒதுக்கி நடிக்க முடியுமா என அவர் கேட்டார். ரஜினிகாந்த் பண்ணா நல்லா இருக்கும். ஆனால் ராணா கதை வருங்காலத்தில் என்ன ஆகும் என்பது எனக்கு தெரியவில்லை” இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.