அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவான, ‘பிரவுட் பாய்ஸ்’ என்ற வலது சாரி அமைப்பின் பேரணி, போதிய ஆதரவாளர்கள் வராததால், பிசுபிசுத்தது.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். வலது சாரி அமைப்புகள் பல, டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதில் ஒன்றான, பிரவுட் பாய்ஸ் அமைப்பு, ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்டில், பிரமாண்ட பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. வெள்ளை நிற மக்களுக்காக இயங்கி வரும் இந்த அமைப்பின் பேரணியில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ‘இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பின அமைப்புகள் சார்பிலும் எதிர்ப்பு பேரணி நடத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த பேரணியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே டிரம்ப் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், 90 நிமிடங்களுக்குள் நிகழ்ச்சி முடித்து கொள்ளப்பட்டது.