மதுரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்தாலும், மாலையில் மழை கொட்டுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையிலும் வானம் மேகக்கூட்டமாக காட்சி அளித்தது.மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது.
மாலை 5 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் வரை மழை நீடித்தது. தல்லாகுளம், டிஆர்ஓ காலனி, ரேஸ்கோர்ஸ் சாலை, அண்ணா நகர், கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பா நகர், ஆரப்பாளையம் மற்றும் அலங்காநல்லூர், வரிச்சியூர், திருமங்கலம், உசிலம்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை பரவலாக பெய்தது.
ஒருசில இடங்களில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காலியிடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழையை வரவேற்கும் விதமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி உற்சாகமாகச் சென்றனர்.
சில இடங்களில் காற்றுடன் பெய்த மழையால் மரக்கிளைகளும் ஓடிந்தன. ஓரிரு பகுதியில் சிறிது நேரம் மின் தடையும் ஏற்பட்டது. மதுரையில் இன்று காலை 8 மணி வரையில் 79.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி அதிகப்டசமாக மதுரை வடக்கு- 79.202 மில்லிமீட்டர், தாயமங்கலம்- 75 மி.மீ, மேலூர்- 62.50, தல்லாகுளம்-59.30 மி.மீ, புலிப்பட்டி- 54.20 மி.மீ, விரகனூர்- 48 மி.மீ மழை பதிவானது.