வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹைதராபாத் !

வங்கக்கடலில் வலுப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், தெலங்கானாவில் கனமழை கொட்டியது. ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியதோடு, கனமழையும் கொட்டியது. கிருஷ்ணா மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இரு கரைகளிலும் கயிறுகளை இணைத்த மக்கள், சீற்றத்துடன் பாய்ந்த தண்ணீரை கடந்து சென்றனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 2‌ சென்டி மீட்டர் மழை கொட்டியது. இதில் பண்ட்லகுடா, வசந்தாலிபுரம், தம்மைகுடா, முஷீராபாத், டாலி சௌக்கி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

பல இடங்களில் மழைநீரில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தீயணைப்பு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here