தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள கிருஷ்ணா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித் – வசந்தா தம்பதி. இவர்களின் மூத்த மகன் தீட்சித் (9). கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலைவிளையாட சென்ற தீட்சித், இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில், அன்றிரவு தீட்சித்தின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.45 லட்சத்தை கொடுத்து அவனை மீட்டுச் செல்லும்படியும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், நேற்று முன்தினம் இரவு மகபூப் நகர் கூட்டு ரோட்டில் ரஞ்சித் பணத்துடன் சில மணி நேரம் வரை காத்திருந்தார். ஆனால், யாரும் அங்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று காலையில் ஊருக்கு வெளியே உள்ள தானமைய்ய குட்டா வனப்பகுதியில் சிறுவனின் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ரஞ்சித் குடும்பத்துக்கு நன்கு பரிச்சயமான சாகர் (22) என்பவரே தீட்சித்தை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாகவும், தன்னை தீட்சித் அடையாளம் கண்டுகொண்டதால் அவனை கொலை செய்ததாகவும் சாகர் வாக்குமூலம் அளித்ததாக மகபூப் நகர் மாவட்ட எஸ்.பி. கோட்டி ரெட்டி கூறினார்.