ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பான் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த பயங்கரவாதிகளை போலீசார் விசாரிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜம்மு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் பாட்டீல் கூறுகையில், ‛இன்று அதிகாலை 5 மணி அளவில் பான் சோதனைச்சாவடி பகுதியில் காரில் வந்த 4 பேரை போலீசார் விசாரிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்குப் பாதுகாப்புப் படையினர், சிஆர்பிஎப், போலீசார் திருப்பிச் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக்கூறினார்.