அனுப்பர்பாளையம்:
கடந்த சில ஆண்டுகளாக கைத்தறி நெசவு நாளுக்கு நாள் நலிவடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதன் பேரில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு 20 வீதம் எனவும், அடுத்த 6 மாதங்களுக்கு 30 சதவீதம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.150 கோடி தள்ளுபடி மானியமாக வழங்கி வந்தது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லாததால் நெசவாளர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.
இதனால் தள்ளுபடி மானியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் தள்ளுபடி மானிய தொகை ரூ.150 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும் 60 வயதை கடந்த நெசவாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் திருப்பூர், கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவை திருப்பூர் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெ.ஜெ.பி.ஜெகநாதன் கூறும்போது, கைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 80 சதவீத நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
மேலும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் நெசவாளர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பலலட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் செழிக்கும். கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று தள்ளுபடி மானியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கும், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.