கே.கே.நகர்:
புதுடெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.
திருச்சி விமான நிலையம்
இந்தநிலையில் இன்று காலை திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணுக்கு காலை 7-49 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனை விமான நிலையத்தின் முனைய மேலாளர் ஆல்பர்ட் எடுத்து பேசினார்.
எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர் பேசுகையில், தகுதியில்லாமல் விமான நிலைய அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனே நீக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்குச் சிறப்பு அனுமதி அளித்து விமான நிலைய முனையத்திற்குள் அனுமதிக்கின்றனர். இது போன்ற நிலை இனி தொடரக்கூடாது. இல்லையென்றால் விமான நிலையம் மீது வெடிகுண்டு வீசப்படும் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முனைய மேலாளர் ஆல்பர்ட் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலைய பணியாளர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
போனில் பேசிய பெண் வெடிகுண்டு வீசப்படும் என்று கூறி மிரட்டல் விடுத்த போதிலும், விமான நிலையத்தில் எங்காவது வெடிகுண்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டுகளைச் செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் மூலம் விமான நிலையத்தில் பயணிகள் அமரும் இடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார்? என்று அவர் பேசிய போன் நம்பரை வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய ஆணையக்குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.