சென்னை:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகம் புதுவை மாநிலங்களில் உள்ள மாவட்ட கோர்ட்டுகள் வருகிற 8-ஆம்தேதி முதல் முழுமையாக செயல்படலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் –
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் கொரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு எவ்வாறு செயல்பட்டதோ அதே போன்று வருகிற பிப்ரவரி 8- ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படலாம். அதே வேளையில் வழக்குகளை எந்த முறையில் விசாரிக்க வேண்டும் என்பதை மாவட்ட முதன்மை நீதிபதிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மாவட்ட அளவில், தாலுகா அளவில் கொரோனா பரவல் குறித்து பரிசீலித்து தகுந்த முடிவினை எடுக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நிபந்தனைகளில் எந்த சமரசமும் செய்யாமல் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கோர்ட்டு வளாகத்துக்குள் இருக்கும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறை, வழக்கறிஞர் அறைகள், உணவகத்தைத் திறப்பது குறித்து வருகிற 8- ஆம்தேதி நீதிமன்றங்கள் திறந்ததை அடுத்து, அதில் இருந்து 3 வாரத்துக்கு பின்னர் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும்.
கோர்ட்டுக்கு வரும் பணியாளர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் ஆகியோர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கோர்ட்டு அறையிலும், வெளியிலும் கூட்டம் கூடத்தடை விதிக்கப்படுகிறது. வழக்குகளை நேரடியாக விசாரிக்கலாமா? காணொலி காட்சி மூலமாக விசாரிக்கலாமா? என்பதை மாவட்ட முதன்மை நீதிபதிகள் முடிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.