கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பக்தர்கள் இன்றி கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடந்து வந்தன.
பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது. கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வின் படி அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் தர்ப்பணம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் மட்டும் மூடப்பட்டிருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி இருந்த பணியாளர்கள் வருமானம் இன்றி கடும் சிரமம் அடைந்தனர். தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது அறிவித்த ஊரடங்கு தளர்வின்படி கோவில்களில் உள்ள தீர்த்தங்களை திறந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் நீராடலாம் என அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கோவில்களில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. ஆனால் ராமேசுவரம் கோவிலில் நேற்று தீர்த்தக் கிணறுகள் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தீர்த்த கிணறுகளில் செல்லும் பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். தொடர்ந்து 22 தீர்த்த கிணறுகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து 10 மாதங்களுக்கு (317 நாட்கள்) பிறகு ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் பக்தர்களின் பயன்பாட்டுக்கு இன்று திறக்கப்பட்டது. காலை 6 மணி முதல் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.
புனித தீர்த்த கிணறுகளில் நீராட கோவில் நிர்வாகம் சார்பில் ஒருவருக்கு தலா ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
10 மாதங்களுக்குப் பிறகு தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.