சீர்வரிசைப் பொருட்களுடன் பழங்குடியின மக்கள்
பழனி முருகன் கோவிலுக்கு குறமகள் வள்ளி பெருந்தகை பாசறையினர் சீர்வரிசை பொருட்களுடன் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள், வனவேங்கைகள் கட்சியினர் , குறமகள் வள்ளி பெருந்தகை பாசறையினர் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சீர்வரிசை பொருட்களுடன் வந்தனர்.
முன்னதாக அவர்கள் பஸ்நிலைய பகுதியில் இருந்து தாம்பூல தட்டு, கூடைகளில் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், வெல்லம், தேன், பூக்கள், பானை, குடம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக பழனி கோவிலுக்குச் சென்றனர்.
ஊர்வலத்தின் முன்பு சிறுவர்கள் வேடர் போன்று வேடமணிந்து வில்-அம்புகளுடன் சென்றனர். மேலும் பக்தர்கள் காவடி எடுத்தும், பெண்கள் கோலாட்டம் ஆடியபடியும் சென்றனர்.
பின்னர் அவர்கள் சீர்வரிசை பொருட்களுடன் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், தமிழர்களின் தாய்குடியான குறவர் இனத்தை சேர்ந்த வள்ளியை தமிழ்கடவுள் முருகன் திருமணம் செய்துள்ளார்.
எனவே எங்கள் சமூகம் சார்பில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்தோம். ஒவ்வொரு வருடமும் இதுபோல் சீர்வரிசை பொருட்களுடன் வந்து முருகனை தரிசனம் செய்ய உள்ளோம் என்றனர்.