அலோர் ஸ்டார்:
பிக்கப் டிரக்கின் கீழுள்ள மேலதிக டயரில் மறைத்து வைத்து 10 கிலோகிராம் எடையுள்ள சிவப்பு வகைப் போதைப்பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் ஆயிர் ஈத்தாம், ஜாலான் சுங்கை கோரோக், கம்போங் பாரு போலீஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள சாலை ஓரத்தில் வைத்து, கெடா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) உறுப்பினர்கள் குறித்த இருவரையும் கைது செய்தனர் என்று கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ பிசோல் சலே கூறினார்.
25 மற்றும் 41 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ஆனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பின் பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“தோயோத்தா ஹிலக்ஸ் பிக்கப் டிரக்கினை சோதனையிட்தத்தன் விளைவாக, ‘குவான்யின்வாங்’ என்று எழுதப்பட்ட 10 பச்சை பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று, இன்று கெடா காவல் படைத் தலைமையகத்தில் (IPK) நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
விசாரணையின் முடிவுகளில், முதல் சந்தேக நபர் இதே முறையில் போதைப்பொருளைக் கொண்டு வருவது இது இரண்டாவது முறையாகும் என்று பிசோல் கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 349,800 ரிங்கிட் என்றும் இந்த போதைப்பொருள் 20,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.
மேலும், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணையில் உதவ இரண்டு சந்தேக நபர்களும் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.