-16 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை..!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சீனப் பக்கத்தில், கோக்ரா உட்பட கிழக்கு லடாக்கில் ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்ஸ் , டெப்சாங் சமவெளி ஆகிய மூன்று மோதல் புள்ளிகளில் மேலும் படைவிலகல் செய்யப்படுவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் எல்லையியிலிருந்து வெளியேற்றப்படுவது குறித்த முடிவு எட்டப்பட்டதாக மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டது,” என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.
இதே போல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “சீனாவுடனான படைவிலகல் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவின் மூலோபாயம் மற்றும் அணுகுமுறை பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டது. நம் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நமது உறுதியான தீர்மானத்தின் விளைவாகும்.” என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு அமர்வின் போது கூறினார்.
மேலும், இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு பொறிமுறைக்கு எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
சீன இராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் எல்லையில் நேரடியாக மோதிக்கொண்டன. பின்னர் மோதலைத் தணிக்க பல சுற்று இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை இரு தரப்பும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.