182 மாணவர்கள் முதலாம் ஆண்டில் இணைந்தனர்
கிள்ளான்:
பண்டார் புக்கிட் திங்கியில் செயல்படும் ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு 182 மாணவர்கள் முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர். ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு தவனை இன்று தொடங்கும் வேளையில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய இயல்பில் செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக இப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக கடந்தாண்டு மத்தியில் இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த பஞ்சனியம்மாள் முனியாண்டி தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பெரும்பாலான கல்வி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இயங்கலை வழியே மேற்கொள்ளப்பட்டன. இன்று தொடங்கி மாணவர்களை நேரடியாக் சந்தித்து கல்வி போதிப்பதை மாணவர்களும் பெற்றோரும் அதிகமாக ஆவலுடன் எதிர்ப் பார்த்திருப்பதை நாங்கள் அறிவோம்.
அரசாங்கம் வழங்கியுள்ள இந்தத் தளர்வு மாணவர்களுக்கு அற்புதமான வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்ட பஞ்சனியம்மாள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவை தொடர்ந்து பள்ளியில் கிருமி நாசினி தெளிப்பு, பள்ளியின் சுற்றச்சூழல் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர் என குறிப்பிட்டார்.
இப்பள்ளியில் பயிலும் 990 மாணவர்களை நேரடியாக சந்திக்கும் மகிழ்ச்சியில் 53 ஆசிரியர்களும் ஆவலுடன் காத்திருந்த நாளும் இன்று வந்ததால் தங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என பஞ்சனியம்மாள் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.
பி.ஆர்.ஜெயசீலன்