– 8 லட்சம் பேர் வருகை புரிந்தனர்
தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 44- ஆவது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த மாதம் 24- ஆம் தேதி தொடங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இரவு 8 மணிவரையில் புத்தக கண்காட்சியில் விற்பனை நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சியில் கலை, இலக்கியம், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, மருத்துவம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஒவ்வொரு நாளும் புத்தக கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் புத்தக கண்காட்சிக்கு சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கினார்கள்.
இந்த ஆண்டு நடந்த புத்தக கண்காட்சிக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர். ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் விற்பனை ஆகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புத்தக கண்காட்சிக்கு செல்வது உண்டு.
இந்த ஆண்டு கொரோனா பரவலால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.