– அதிரடித் தீர்வுக்கு நிறுவனம் ஒப்புதல்!
காப்பார்-
காப்பார் ஜாலான் ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மண் லோரிகளால் ஏற்படும் பாதிப்பிற்கும் தூய்மைக்கேட்டிற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளியின் அருகில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளால் இடைவிடாது சாரை..சாரையாக செல்லும் மண் லோரிகளால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியரகள், பெற்றோர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் பள்ளியைச் சுற்றிலும் மிகவும் மோசமான தூசு படிவதாலும் சுகாதார தூய்மைக்கேடு ஏற்படும் என்ற நிலையில் பெற்றோர் கலக்கமடைந்திருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து இம்மாதம் 3 ஆம் தேதி பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், மேம்பாட்டு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் பள்ளியின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் செவிசாய்த்த மேம்பாட்டு நிறுவனம் மாணவர்களின் பாதுகாப்பையும் பள்ளி சுகாதாரத்தையும் கவனத்தில் கொள்வதாக ஒப்புக்கொண்டது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சூரியன் சிவம் , பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் ராமசந்திரன் முன்வைத்த மாணவர்களின் பாதுகாப்புக்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேம்பாட்டு நிறுவன உரிமையாளர் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தார்.
இப்பள்ளியில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் 19 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் முழுமையாக 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என குறிப்பிட்ட பள்ளி வாரிய உறுப்பினர் மணிராஜ், பள்ளியின் அருகிலேயே பாலர் பள்ளி செயல்பட்டு வருவதாகவும் அந்த மாணவர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
-பி.ஆர்.ஜெயசீலன்