–காலதிற்கேற்ற கட்டாயம்!
சிங்கப்பூர்-
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஏழாம் தலைமுறை அவசர மருத்துவ வாகனம் தானாகவே தூய்மைப்படுத்திக்கொள்ளும் அமைப்பைக் கொண்டது.
இந்த புதிய வகை அவசர மருத்துவ வாகனம் இவ்வாண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. அவை எதிர்காலத் தொற்றுப் பரவல்களைத் துணை மருத்துவப் படையினரால் சிறந்த முறையில் கையாள வகை செய்யும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஏழாம் தலைமுறை அவசர மருத்துவ வாகனம் உட்பட பல புதுவகை வாகனங்கள், குடிமைத் தற்காப்புப் படையின் நேற்றைய பணித்திட்டக் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பல தீயணைப்பு நிலையங்களில் இருந்து மனிதவளமும் சாதனங்களும் தேவைப்படும் பெரும் தீச்சம்பவங்கள், விமான விபத்துகள் போன்ற நிகழ்வுகளின்போது நடமாடும் தளபத்திய சாவடிகளாகச் செயல்படும் வகையில் முன்னணி தளபத்திய வாகனம், தளபத்திய வாகனம் ஆகியவற்றின் புது மாதிரிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
குடிமைத் தற்காப்புப் படை, தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, எஸ்டி இன்ஜினியரிங் ஆகிய அமைப்புகளின் கூட்டுமுயற்சியில் புதுவகை தளபத்திய வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்போதுள்ள எட்டு முன்னணி தளபத்திய வாகனங்களுக்கும் ஐந்து தளபத்திய வாகனங்களுக்கும் பதிலாக இவ்வாண்டு ஜூலை முதல் படிப்படியாக புதிய வாகனங்கள் செயல்பாட்டிற்கு வரும்.